Saturday, November 21, 2015

TN CONFEDERATION DECIDES TO HOLD MASSIVE DEMONSTRATION AT STATE HQRS ON 24TH NOV. 2015. IN OTHER STATIONS ON 27.11.15

அன்புத் தோழர்களே ! வணக்கம் ! 

7 ஆவது ஊதியக் குழுவின் பிற்போக்குத்தனமான  பரிந்துரைகளை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனெனில்  10  ஆண்டுகள்  கழித்து வழங்கப்படும் ஊதிய  உயர்வு  வெறும் 14.29% மட்டுமே .  அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ஊதிய உயர்வினால் அரசுக்கு 1 லட்சம் கோடி மேலும் செலவு  என்று  ஊடகங்களில்  பொய்  பிரச்சாரம் செய்யப்படுவதை  நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது பொது மக்களை  அரசு ஊழியர்களுக்கு எதிராக தூண்டிவிடும்  கேவலமான அரசியல் அன்றி வேறு  எதுவுமாக இருக்க முடியாது.

உதாரணத்திற்கு சாதாரண கடை நிலை ஊழியரின்  ஊதியம் குறித்து  பார்த்தாலே இது தெளிவாகப் புரியும் . 

தற்போது MTS  ஊழியர் வாங்கும் ஆரம்ப நிலை சம்பளம் : ரூ. 7000/-
1.1.2016 முதல் வழங்க வேண்டிய   D .A .  125%                             :  ரூ. 8750/-
ஆக 1.1.2016 இல்  பெறும்  மொத்த ஊதியம்                               :   ரூ.15750/-

தற்போது ஊதியக் குழு 125% D.A. சேர்த்து நிர்ணயித்துள்ள 
ஆரம்ப நிலை அடிப்படை  ஊதியம்                                              :  ரூ.18000/-
======================================================================
இரண்டிற்கும் வித்தியாசமான  ஊதிய உயர்வு                      :  ரூ. 2250/- மட்டும்.
======================================================================
ஆனால் தற்போது அவர் கட்டவேண்டிய 
NPS  CONTRIBUTION       10%                                                                  :  ரூ. 1800/-
தற்போதைய திட்டப்படி  அவர் கட்டவேண்டிய 
CGEGIS  PREMIUM  தொகை                                                               : ரூ. 1500/-
(இரண்டு தொகைகளுமே  அரசிடம்தான் செல்லும் . 
உடனே ஊழியருக்கு  திரும்ப வராது . )
மொத்தம் அவர்  உடனடியாக கட்டவேண்டிய  தொகை      : ரூ. 3300/-

உயர்த்தப் பட்டது  ரூ. 2250/- கட்டவேண்டிய ரூ. 3300/-. அப்படியானால் TAKE  HOME PAY  என்னவாகும்  ? HRA  யும் குறைக்கப்பட்டு விட்டது.  TPA  மட்டும் பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதால்  உயருகிறது. அப்படியானால் அரசுக்கு செலவினம் என்பது  எவ்வளவு ?

இது போலத்தான் ஒவ்வொரு ஊழியருக்கும்.  நிலைமை இதுவெனில் , அரசுக்கு ஒரு லட்சம் கோடி உடனடியாக  எப்படி செலவாகும்.? இதுபோல பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒட்டு மொத்தத்தில் ஊதியக் குழு என்ற போர்வையில்  மத்திய அரசு , தனது  ஊழியர்களை அடியோடு ஏமாற்ற நினைக்கிறது.

இந்த நிலைமைகளை கணக்கில் கொண்ட ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான  NJCA முதற்கட்டமாக  எதிர்வரும் 27.11.2015 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கறுப்புச் சின்னம்  அணிந்து அவரவர்  இடங்களில் ஊழியர்களை ஒன்று திரட்டி  எழுச்சி மிகு  கண்டன ஆர்பாட்டம்  நடத்திட தாக்கீது அனுப்பி உள்ளது . இதனை  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும் , நம்முடைய NFPE சம்மேளனமும்  ஏற்று நடத்திட வேண்டுகிறது. எனவே  

தமிழகமெங்கும் 
(சென்னை பெருநகர கோட்டங்கள் உட்பட )

1. எதிர் வரும்  27.11.2015 அன்று அனைத்து ஊழியர்களும்  கருப்பு சின்னம் அணிந்து  மத்திய  அரசுக்கு  நம்  எதிர்ப்பை  தெரிவிக்க  வேண்டுகிறோம்.

2. அதே  நாளில் அந்தந்த   தலைமை அஞ்சலக  வாயிலில்  மற்றும் கோட்ட அலுவலக வாயிலில்  உணவு  இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்,

3. இந்த செய்தியை  அனைத்து   அச்சு மற்றும் காட்சி ஊடங்களுக்கு  தெரிவித்து  உங்களது போராட்டத்தை பதிவு செய்திட வேண்டுகிறோம்.

4. போராட்டத்தில் எடுக்கப் படும் புகைப்படங்களை  ஈமெயில்  மூலம் மாநிலச் சங்கத்திற்கு  உடனே  அனுப்பிட  வேண்டுகிறோம். (பல தோழர்கள் ஒரு வாரம் கழித்து அனுப்புகின்றனர். அதற்குள் அந்த செய்தி  பழமையானதால் நம்  வலைத்தளத்தில்  பிரசுரிக்க  இயலாமல் போகிறது  என்பதை  நினைவில் கொள்ளவும்.)

 மாநிலத் தலைமையகத்தில் 
மாபெரும்  ஆர்ப்பாட்டம் 

இதற்கு முன்னோட்டமாக  ஆயிரக்கணக்கில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும் வண்ணம்  நம்முடைய  தமிழ் மாநில தலை நகராம் சென்னையில்  அண்ணா சாலை  தலைமை அஞ்சலக வளாகத்தில்   தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில்  

எதிர்வரும்  24.11.2015 செவ்வாய்  அன்று மதியம் ஒரு மணியளவில்  
உணவு  இடைவேளையில் 
ஒரு மாபெரும்  கண்டன ஆர்பாட்டம் 
நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. 

இந்தப் போராட்டத்தில் சென்னை பெரு நகர மண்டலத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும்  ஆயிரக்கணக்கில்  தோழர் /தோழியர் அணிதிரள வேண்டுகிறோம். அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/ கிளைச் செயலர்கள்  கண்டிப்பாக  இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு  மத்திய அரசுக்கு  நம்  முழு எதிர்ப்பை பதிவு செய்திட  கேட்டுக் கொள்கிறோம். 

இது வெறும்  ஆர்ப்பாட்டம்  அல்ல  !                                       உங்களின்  உணர்வு !
இது  வெறும்  போராட்டமல்ல !                                                உங்களின்  வாழ்வு !

எவரும்  இந்த  செய்தி  தெரியவில்லை என்று கூறக் கூடாது . தெரிந்தவர்கள் இந்த  செய்தியை உடனே  அடுத்த  தோழருக்கும்   மற்றும் நிர்வாகிகளுக்கும்  பகிரவும் .

பரவட்டும் !    போராட்ட  தீ  பரவட்டும் !
முழங்கட்டும்  !   உரிமை  முழக்கம்  முழங்கட்டும் !
எட்டட்டும்  46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல் 
மத்திய  அரசின் செவிகளுக்கு எட்டட்டும் !

இன்றில்லையேல்  இனி  அடுத்த பத்து  ஆண்டுகளோ ? 
அல்லது  அதுவும் இல்லையோ ? எவருக்கும் தெரியாது .