Saturday, January 9, 2016

SUCCESS FOR CIRCLE UNION'S CONTINUED EFFORTS ON SEVERAL STAFF MATTERS !

மாநிலச் சங்கத்தின் இடைவிடாத 

முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிகள் !



1. மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சியின் காரணமாகவும் ஈரோடு கோட்டத் தோழர்களின்  தொடர்ந்த போராட்ட இயக்கங்களின் காரணமாகவும் ஊழியர் விரோத , ஊழல் அதிகாரி, ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி திரு. சுந்தரராஜன் அவர்கள்  08.01.2016 அன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.  


பிரச்சினையில் தலையிட்டு  தற்காலிகத்  தீர்வு தந்த ( பிரச்சினை இட மாற்றம் பெற்றிருக்கிறது ) CHIEF  PMG அவர்களுக்கும் , மேற்கு மண்டல PMG அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் சார்பில்   நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநில/ மண்டல நிர்வாகம் உடனடியாக தவறுகள் பல புரிந்த அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திடக் கோருகிறோம்.


2. திண்டுக்கல் கோட்ட முன்னாள் முதுநிலைக் கண்காணிப்பாளரால் அனைத்து சங்கங்களின் அறிவிப்பு பலகை  அஞ்சலக உள்  வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டது  உங்களுக்குத் தெரியும்.  அந்த அதிகாரியும் நம்முடைய மாநில மற்றும் அகில இந்திய சங்கங்களின் தொடர் புகார்களால்  இடமாற்றம் செய்யப்பட்டு வேறு மாநிலத்திற்கு அனுப்பப் பட்டதும் உங்களுக்குத் தெரியும் .  தற்போது புதிய அதிகாரியிடம் இந்தப் பிரச்சினை  எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலக   உள்  வளாகத்திலேயே நம் சங்க அறிவிப்பு பலகை கடந்த 31.12.2015 அன்று மீண்டும் வைக்கப்பட்டது  என்பதை பெருமையாக   அறிவிக்கின்றோம்.  

கடந்த புதுகை மாநில மாநாட்டில்  நம்முடைய மதுரை மண்டலச் செயலர் தோழர். ஜோதி  மற்றும்  நம்முடைய முன்னாள் மாநில உதவித் தலைவர் தோழர். சுப்பிரமணியன் ஆகியோர்  சூளுரைத்தது  தற்போது  நிறைவேறி உள்ளது.   இதற்கான   உரிய உத்திரவை அளித்த  நம்முடைய  CPMG   திரு. சார்லஸ் லோபோ அவர்களுக்கும், மண்டல நெறியாளர் திருமதி. நிர்மலாதேவி அவர்களுக்கும்  மற்றும் கோட்ட  முதுநிலைக் கண்காணிப்பாளர்  திரு. சாந்தகுமார்  அவர்களுக்கும்  நம் மாநிலச்   சங்கத்தின் நெஞ்சார்ந்த  நன்றி  !


3. கடந்த 10.1.2014 COC  யின்  தென் மண்டல  தொடர் முழக்க ஆர்ப்பாட்டத் தில் பங்கு கொண்டதால்  பழி வாங்கப்பட்ட  தோழர்களில் ஏற்கனவே 12 பேர்களுக்கு மாநிலச் சங்கத்தின் இடைவிடாத தொடர் முயற்சியால் DIES NON  தண்டனை ரத்து செய்யப்பட்டது உங்களுக்குத் தெரியும். 


தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநிலச் சங்கத்தின் ஆலோசனை பெற்று, ஒன்றரை வருடங்கள் கழித்து,   உரிய அதிகாரிக்கு முறையாக மேல் முறையீடு செய்த  தென்காசி  கிளைச் செயலர்  தோழர். சண்முகவேல் அவர்களின் மேல்முறையீடு , காலதாமதம் CONDONE செய்யப்பட்டு , ஏற்கப்பட்டு அவரது தண்டனை முழுவதுமாக  ரத்து செய்யப்பட்டது.  மேல்முறையீட்டை முறையாக ஆய்வு செய்து  இந்த உத்திரவை வழங்கிய  தென் மண்டல நெறியாளர் திருமதி. நிர்மலாதேவி அவர்களுக்கு நம் மாநிலச்   சங்கத்தின் நன்றியைத்   தெரிவித்துக் கொள்கிறோம்  !


4. இதய நோய் காரணமாக  அவசர சிகிச்சை பிரிவில் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நம்முடைய தென் சென்னை  கோட்டத்தைச் சேர்ந்த  தோழர். திரு. குரு சங்கரன் அவர்களுக்கு, 


மாநிலச் சங்கத்தின்  SMS  அவசர அறிவிப்பையே ஏற்று, தெரிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள்  உடனடியாக அறுவை சிகிச்சைக்கான முன்பணம் வழங்கிட  உத்திரவு வழங்கி, காசோலையையும்  செலுத்தச் செய்த  சென்னை பெருநகர மண்டல  PMG திரு மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களுக்கும், இதற்கு உதவி புரிந்த தென் சென்னை கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்களுக்கும் நம்முடைய    மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த  நன்றி !


தற்போது அந்த  தோழர்.  அறுவை சிகிச்சை முடிந்து நலமாக  உள்ளதாக கோட்டச்  செயலர்   தோழர். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விரைவில்  நலமுடன்  இல்லம்  திரும்ப வாழ்த்துகிறோம் !


5.  தென் சென்னை  கோட்டத்தின்  புனித தாமஸ்   மவுண்ட்  தலைமை அஞ்சலக  கட்டிட த்தின்  பல்வேறு பிரச்சினைகள் குறித்து நம்முடைய மாநிலச் சங்கத்தின்  புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்திட ஏற்கனவே   நம்முடைய  CPMG  அவர்கள் ,    PMGG  CCR , PMGG  MM   மற்றும்  EE  CIVIL கொண்ட  மூவர்  குழுவை அனுப்பி  நேரில்  ஆய்வு  செய்து  அறிக்கை அனுப்பிட  பணித்தது  குறித்தும் , அவர்கள்  நம்முடைய கோட்டச் செயலர் தோழர். ராஜேந்திரனிடம் நேரில்  பல  பிரச்சினை  குறித்து கேட்டு அறிந்ததும்   உங்களுக்கு  ஏற்கனவே தெரிவித்திருந்தோம் .  தற்போது அந்தக் குழுவின்  அறிக்கை அடிப்படையில்   தலைமை அஞ்சலக கழிப்பறைகளைப் புதுப்பித்திட  ரூ.1,84,000/-  முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளருக்கே  அதிகாரம்  வழங்கி  உத்திரவு  பெற்றுள்ளோம். CIVIL  WING  இந்தப் பணியைச்  செய்யக் கூடாது என்ற  முடிவை எடுத்த  CPMG  மற்றும்  PMG CCR ,  PMG MM  ஆகியோருக்கு  நம் நன்றி.  

மேலும் கட்டிடத்தின் தென்பகுதி  தரைப்பகுதியில்   ECOMMERCE  ஊழியருக்கு   கட்டப்படவிருந்த  கழிப்பறை  எட்டு  அடி  தள்ளி   தற்போது  கட்டப்பட பணிக்கப்பட்டுள்ளது. மேலும்  இந்த  கழிப்பறைகள்   தலைமை அஞ்சலக பெண் ஊழியர்களுக்கும்  பயன்படும்  வகையில் மாற்றியமைக்கப்படும் என்று  PMG CCR  உறுதி  அளித்துள்ளார். மேலும் நம் கடித்தத்தில் குறிப்பிட்ட பல பிரச்சினைகள் மீதும்  உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  PMG CCR  அவர்கள்  தெரிவித்தார்.

6. பழிவாங்கும் நடவடிக்கையாக ஊட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நம்முடைய  RMS  மூன்றின் மாநிலத் தலைவர்  தோழர். K . R . கணேசன் அவர்களின்   பிரச்சினை   நம்முடைய  NFPE  உறுப்பு சங்கங்களால்  RJCM மற்றும்  FMM  கூட்டங்களில் எடுத்துச் செல்லப்பட்டு  CPMG அவர்களிடம் இடமாற்றம் மாற்றித்தர ஒப்புதல் பெறப்பட்டது. 


கடந்த 29.12.2015 அன்றைய  இரு மாதங்களுக்கு ஒரு  முறையிலான  PMG WR  அவர்களுடனான பேட்டியின்போதும் இந்தப்  பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.. PMG WR உடன்  இதனை ஏற்றுக் கொண்டு உத்திரவிடுவதாக  உறுதியளித்தார்.  அதன்படி  கடந்த 06.01.2016 அன்று அவர்  திருப்பூர்  RMS  க்கு  இடமாற்ற  உத்திரவு பெற்றார்  என்பதை  மகிழச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். 


மேலும்  கடந்த 29.12.2015 மேற்கு மண்டல  PMG யுடனான பேட்டியின் போது கடிதங்கள் அளித்து பேசப்பட்ட பிரச்சினைகள்,  கடந்த 30.12.2015 அன்று தென்மண்டல PMG யுடனான பேட்டியின்போது  கடிதங்கள் அளித்து பேசப்பட்ட  பிரச்சினைகள்,  ஜனவரி முதல்  நாளன்று  CHIEF PMG இடம் கடிதம்  அளித்து  பேசப்பட்ட பிரச்சினைகள்  மற்றும் இந்த வாரத்தில்  PMG CCR  அவர்களிடம் கடிதங்கள்   அளித்து  பேசப்பட்ட  பிரச்சினைகள் குறித்து அடுத்த   செய்தியில் தெரிவிக்கிறோம்.

முயற்சிகள்  தொடரும்  !   வெற்றிகளும் கூடவே  தொடரும்தானே  ?