Thursday, November 27, 2014

PATTUKKOTTAI P 3 DIVISIONAL CONFERENCE A GRAND SUCCESS

பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின் ஈராண்டு மாநாடு மற்றும்  சம்மேளன வைர விழா கடந்த 23.11.2014 அன்று பட்டுக்கோட்டை  தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  வைரவிழா நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக சம்மேளனத்தின் மூத்த  தோழரும்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான தோழர். M . முத்துகுமாரசாமி அவர்கள் சம்மேளனக் கொடியை   ஏற்றிவைத்தார். 
கோட்ட சங்கத்தின் தலைவர் தோழியர். V . முத்துலட்சுமி மாநாட்டு நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கினார். கோட்டச் செயலர் தோழர்  R . மோகன் அவர்கள் வரவேற்றார்.  மாநாட்டின் ஈராண்டு அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு அளிக்கப்பட்டவுடன்  நடப்பு ஈராண்டுகளுக்கான  நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி  இனிதே நடைபெற்றது.  நிர்வாகிகள் தேர்தலில் கீழ்க்கண்ட  தோழர்கள்  முக்கிய  நிர்வாகிகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்டனர். 

கோட்டத் தலைவர்              : தோழர். தட்சிணாமூர்த்தி, APM, PTK  HO 

கோட்டச் செயலர்                 : தோழர். P . சேகர் , P .A ., பட்டுக்கோட்டை HO 

நிதிச் செயலர்                          : தோழியர். ஜானகிதேவி , SPM , ஒரத்தநாடு 

இதனைத் தொடர்ந்து  வைரவிழா நிகழ்ச்சியின்  ஒரு பகுதியாக சங்கத்தில் பணியாற்றி  ஒய்வு பெற்ற  மூத்த  தலைவர்கள்  அஞ்சல் மூன்றின் தோழர். M . முத்துகுமாரசாமி , அஞ்சல் நான்கின் தோழர்  P . சத்தியமூர்த்தி , GDS  சங்கத்தின் தோழர் . R . பால்பாண்டி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.  அந்தத் தலைவர்கள்  சங்கத்தின் வரலாறு குறித்தும் தங்கள் பங்கு குறித்தும்  நினைவுகளை பகிர்ந்துகொண்டது விழாவின்  முக்கிய  நிகழ்வாக அமைந்தது.

தொடர்ந்து அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர்  J . இராமமூர்த்தி அவர்கள் சம்மேளனத்தின் வரலாறு மற்றும் இலாக்காவின் இன்றைய நிலை , நம் தொழிற்சங்கத்தின்  பணிகள் குறித்து விரிவாக மாநாட்டு  உரையினை  நல்கினார். 

மாநாட்டில்  தஞ்சை அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர். R . செல்வகுமார்,  தலைவர் தோழர். ரபிக் , நிதிச் செயலர் தோழர் . மணி ,  திருத்துறை பூண்டி  அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர். S . நாகலிங்கம் , செயலர் தோழர். P . அன்பழகன், நிதிச் செயலர் தோழர். L  சுப்பிர மணியன்  .,மயிலாடுதுறை கோட்டத் தலைவர் தோழர். P . ரவிச்சந்திரன், நிதிச் செயலர் தோழர். K . வெங்கடேஷ் , பட்டுக்கோட்டை அஞ்சல் நான்கின்  செயலர் தோழர். T. கார்த்திகேயன்  GDS  சங்கத்தின் மாநில உதவித் தலைவர் தோழர் M . இளங்கோவன் ,அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்டச் செயலர் தோழர். P .L . ராஜகோபாலன்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .

கோட்டச் சங்கத்தின் முன்னாள் நிதிச் செயலர் தோழர்  N . மகேந்திரன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

மோட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! மாநாட்டு நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம்.