Monday, July 29, 2013

SOUTHERN REGION TRADE UNION STUDY CAMP AND DIVL/BR.SECS MEETING AT MADURAI

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !

நமது குடந்தை மாநில மாநாட்டில் அறிவித்த படி, மாநிலச் சங்கம் பொறுப்பேற்றவுடன் இரண்டு மாதங்களுக்குள்  மண்டல ரீதியிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி , தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகளை  ஒருங்கிணைத்து, அந்தந்த மண்டல அதிகாரிகளிடமும், மாநில உயர் அதிகாரியிடமும்  MEMORANDUM அளித்து , ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் தீர்வினை வேண்டியும் , அப்படி தீர்க்கப்படவில்லை எனில் மண்டல ரீதியில்  தொடர் போராட்டங்களை  நடத்திடுவதாகவும்  மாநிலச் சங்கம் முடிவெடுத்துள்ளது. 

அதன் படி , முதலில் மிக அதிகமாக பிரச்சினைகள் உள்ள தென் மண்டலத்தில் , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அதன் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தினை கூட்டுவது என்று முடிவினை எடுத்தோம். அந்த கூட்டத்தினை ஏற்று நடத்துவது என்று மதுரை கோட்ட அஞ்சல் மூன்று சங்கம்  மனம் உவந்து முன்வந்துள்ளது  என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும் , புதிதாக  இலாக்காவில் சேர்ந்துள்ள இளைஞர்களுக்கு  தொழிற் சங்க வரலாறு மற்றும் இலாக்கா  நடத்தை விதிகள்,  ஊழியர் பாதுகாப்பு விதிகள், தகவல் அறியும் உரிமை சட்டம் , CONTRIBUTORY  NEGLIGENCE  குறித்த விதிகள்  , CCS  CCA  RULES 1965 உள்ளிட்ட விதிகளில் ஊழியர்களின் பாது காப்பு அம்சங்கள் குறித்து தென் மண்டல அளவில்  ஒரு  தொழிற் சங்க பயிற்சி வகுப்பு  நடத்திடவும் முடிவெடுத்தோம். அதனையும்  மதுரை கோட்ட அஞ்சல் மூன்று சங்கமே எடுத்து நடத்திட  விழைந்துள்ளது  என்பது பாராட்டத் தக்கது. 

இந்த நிகழ்ச்சி  இளைஞர்களுக்கு மட்டுமல்ல , நம் சங்கத்தின் முன்னோடி களுக்கும் தான்.  அதிகாரிகளின்  விதி மீறிய,  தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இருந்து ஊழியர்களை பாது காக்க இந்த வகுப்பு  ஒரு கேடயமாக அமைந்திடும் என்பது திண்ணம். 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09 ம்  தேதி  விடுமுறை தினத்தன்று   இந்த தொழிற் சங்க பயிற்சி வகுப்பும்  ஆகஸ்ட் மாதம் 10 ம்  தேதி கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டமும்  நடைபெற முடிவெடுக்கப் பட்டுள்ளது.  

எனவே  தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் இதனையே முன்னறிவிப்பாக எடுத்துக் கொண்டு  பயிற்சி வகுப்புக்கு  தங்கள் பகுதியில் இருந்து பெருமளவில் இளைஞர்களையும்  சங்க முன்னோடிகளையும் கலந்து கொண்டிட  ஆவன செய்திட வேண்டுகிறோம்.  இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது என்று  வெளியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் முன் கூட்டியே கேட்டுக் கொள்கிறோம்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கிற தோழிய/ தோழர்களுக்கு  குறைந்த பட்ச DELEGATE  கட்டணம் வசூலிக்கப் படும். அந்தப் பணத்தில்  காலை சிற்றுண்டி , 11 மணியளவில் தேநீர், மதிய உணவு, மாலை தேநீர், மற்றும்  வகுப்பு முடிந்தவுடன் ஊருக்கு செல்வதற்கு முன்னர் எளிய சிற்றுண்டி வழங்கப் படும். வகுப்புகளில் குறிப்பெடுக்க SCRIBBLING PAD , பேனா  உள்ளிட்டவை அளிக்கப் படும்

மறுநாள் நடைபெறும் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் , தென் மண்டலத்தில் உள்ள அனைத்து  அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறுதல் இன்றிக் கலந்து கொண்டிட வேண்டுகிறோம் . அவர்கள்  வரும்போது , உடனடியாக முழு விபரத்துடன் MEMORANDAM  தயாரித்து  மண்டல / மாநில அதிகாரிகளுக்கு அளிக்கும் வகையில் அவர்களது  கோட்ட மட்டத்தில்  மாதாந்திரப் பேட்டியில்  எடுக்கப் பட்டும் தீர்க்கப்படாத ஊழியர்கள் பிரச்சினைகளையும், பொதுப் பிரச்சினை களையும்  விரிவாக  அவர்களது சங்க லெட்டர்  PAD  இல் TYPE  செய்து எடுத்து வருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.  

தயவு செய்து வாய்மொழியாக மட்டுமே  சொல்லிச் செல்லலாம் என்றுஎண்ண  வேண்டாம் என்றும் அன்புடன் வேண்டுகிறோம்.  அது முழுமையாக பிரச்சினைகளை மாநிலச் செயலருக்கு  அளிக்காது என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டுகிறோம். 

நிகழ்ச்சிகள் நடைபெறும்  இடம், நேரம் ,  எடுக்கப் படும் வகுப்புகள் , வகுப்புகளை எடுப்போர் குறித்த விபரங்கள் ஓரிரு நாட்களில்   சுற்றறிக்கையாக வெளியிடப்படும்.  இதனைப் பார்க்கும் தோழர்கள் , இந்த விபரத்தினை தயவு செய்து  தென் மண்டலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் உடன் தெரிவிக்க வேண்டுகிறோம். 

குறிப்பு : 
தொழிற் சங்க பயிற்சி வகுப்புகளுக்கு  கண்டிப்பாக  தோழியர்களையும் அழைத்து வரவும் . இது ஒரு நல்ல வாய்ப்பு . நிச்சயம்  உபயோகப் படுத்திக்  கொள்ளவும். 

தோழமை வாழ்த்துக்களுடன் 
உங்கள் மாநிலச் செயலர் .