Sunday, April 28, 2013

ATROCITIES AND OUTRAGE AGAINST STAFF AT TAMBARAM DIVISION - CIRCLE UNION PROGRAMME FOLLOWS

"தோட்டம் காக்கப் போட்ட வேலி  பயிரைத் தின்பதோ ?
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ?"

அன்புத் தோழர்களே !  வணக்கம். தாம்பரம் கோட்ட அதிகாரியின் அடாவடித்தனத்தையும் அதிகார அத்து மீறலையும் எதிர்த்து வெடித்தெழுந்த அம்பத்தூர் கிளைச் செயலரின் சுற்றறிக்கையினை  உங்கள் பார்வைக்கு 
கீழே அளித்துள்ளோம்.  

அம்பத்தூர் கிளைக்கென  தொழிற்சங்கத்தில் வரலாற்றுப் பதிவுகள் பலவுண்டு . அமைதியின் திரு உருவாய் , அறிவுப் பெருங்கடலாய் , ஆற்றலின் மகா சக்தியாய்  நம் அருமைத் தலைவர் KVS  அவர்களைத் தந்த கிளை  அம்பத்தூர்.  

திருவாளர் தேவராஜன் காலத்தில்  நடைபெற்ற போராட்டங்கள் 
அம்பத்தூர்  வீரத்தின் வெளிப்பாடு.  

கையூட்டுப்  பெற்ற  அம்பத்தூர் ASP  கையும் களவுமாக CBI  ஆல்  பிடிக்கப் பட்டு  தண்டனைக்காளானது  அம்பத்தூர் விவேகத்தின் வெளிப்பாடு. 

KVS  அவர்கள் டெல்லி மாநகர் சென்று விட்டார் என்று எண்ணி கொக்கரிக்கும்  குட்டி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை .  

அதிகாரம் உங்களுக்கு அரசாங்கம் கொடுத்திருப்பது  நிர்வாகம் நல்லமுறையில் நடத்தி  பொதுமக்களுக்கும்  ஊழியர்களுக்கும் நன்மை செய்வதற்குத்தான் . அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப் பட்டு  ஊழியர்கள் கொடுமைப் படுத்தப் பட அல்ல . ஊழல்  செய்திட அல்ல . பெண் ஊழியர்கள் கேவலப் படுத்தப் பட அல்ல ! அஞ்சலகம் அடிமைக் கொட்டடியாய் மாற்றப் பட அல்ல ! 

உங்கள் தவறான  போக்கு திருத்திக் கொள்ளப் படவில்லையானால் , ஊழல்கள் களையப் படவில்லையானால் 
மத்திய , மாநிலச் சங்கங்கள் வாளா இருக்காது !

உங்கள் மீது பெண் ஊழியர்கள பலர்  கைப்பட அளித்த புகார் மனுக்கள் புது டெல்லியில் உள்ள  மகளிர்  உரிமை ஆணையத்தில் மத்திய சங்கத்தால் நேரிடையாகச் சென்று அளிக்கப் படும் .  உயர் மட்ட விசாரணை கோரப்படும். 

உங்களின் நிர்வாகம் குறித்த ஊழல் புகார்கள் , PMG, CPMG,  MEMBER(P),  DG  ஆகியோரிடம்  நேரடி விசாரணை  கோரி அளிக்கப் படும் !

அதன் மீது  கவன ஈர்ப்பு கொடுத்திட மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் படும் ! நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கிறோம் !

"மாறினால் மாறட்டும் ! இல்லையேல் மாற்றுவோம் !
தீமைகள் யாவையும் கூண்டிலே ஏற்றுவோம் !"