Saturday, February 21, 2015

PEPU COMRADES MERGED WITH OUR MIGHTY NFPE AT CHENNAI GPO AND ANNA ROAD !

"ஒரு தாய் வயிற்றில் வந்த உடன் பிறப்பில் 
முன்பு பிரிவிருந்தால்  பின்பு உறவு வரும்"

NFPE  அஞ்சல்  மூன்று சங்கத்தில் ஒரு காலத்திய மனமாச்சரியங்கள் இன்று மறைந்து வருவதும்  ஒன்றாக  NFPE  யில் அனைவரும் இணைந்து செயல்படுவதும் கண்கூடு. இது நமது  ஒற்றுமை உணர்வுக்கும் , சகிப்புத் தன்மைக்கும், அனைவரையும்  அரவணைத்து செல்லும்  சிந்தனைக்கும், ஊழியர் நலனில்  நம் NFPE  நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கொண்டி ருக்கும் அக்கறைக்கும்  கிடைத்துவரும்  வெற்றியாகும். 

அதன் வழியில் தாய்ச்  சங்கமான  NFPE  அஞ்சல் மூன்றிலிருந்து  பிரிந்து சென்று  PEPU சங்கத்தில் சென்னை  GPO  மற்றும் அண்ணா சாலை கிளைகளில் இது காலம் இருந்து வந்த தோழர்கள் பலர்  இன்று  நம் அஞ்சல் மூன்று  சங்கத்தில் இணைந்தது   நமது  இயக்கத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது. இந்த  நிகழ்வு  ஆடம்பர  விழாவாக இல்லாமல் ஒரு எளிமையான   உணர்வு பூர்வமான  நிகழ்வாக  இன்று சென்னை GPO வளாகத்தில் நடைபெற்றது. 

விழா நிகழ்வுக்கு  GPO அஞ்சல் மூன்றின்  தலைவர் தோழர். நோம்புராஜ் அவர்கள் தலைமை ஏற்க ,  இயக்கத்தின் இளைய தோழர், செயல் வீரர்  GPO அஞ்சல் மூன்று கிளையின்  செயலர் தோழர்  .K . முரளி அவர்கள் பாங்கோடு அனைவரையும் வரவேற்க ,  

சென்னை GPO  PEPU  கிளைச் செயலர்  
தோழர். S .அன்பரசன்  அவர்கள் தலைமையில்  
சென்னை GPO கிளையின்  11 தோழர்களும் ,  

அண்ணா சாலை  PEPU கிளைச் செயலர் 
தோழர். பால் பிரேம்குமார்  அவர்கள் தலைமையில் 
அண்ணா சாலை கிளையின்  9 தோழர்களும் 

அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர்  தோழர். J . ராமமூர்த்தி  அவர்களிடம்  உறுப்பினர் படிவம் அளித்து அவர் முன்னிலையில்  நம் சங்கத்தின் பாசப் பிணைப்பாக  ஒன்றானார்கள்  என்பது  மகிழ்விலும்  பெருமகிழ்வே  !

தோழர் .அன்பரசன் அவர்களுக்கு   சென்னை GPO கிளையின் தலைவர் தோழர். நோம்புராஜ் அவர்கள் கைத்தறி ஆடை அணிவித்து தாய்ச் சங்கத்தில் இணைந்த அவரை   கௌரவித்தார்.

தோழர். பால் பிரேம் குமார் அவர்களுக்கு  அண்ணா சாலை கிளையின் உதவிச் செயலர் தோழர். சிட்டிபாபு அவர்கள் கைத்தறி ஆடை அணிவித்து தாய்ச் சங்கத்தில் இணைந்த அவரை   கௌரவித்தார். அண்ணா சாலை அஞ்சல் மூன்றின் கிளைச் செயலர் தோழர். S . வெங்கடேசன் அவர்கள் பயிற்சி வகுப்பில் இருந்ததால்  தன்னால் வர இயலவில்லை என்றும் இணையும் தோழர்களுக்கு  தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறும்  தெரிவித்தார்.

நம்முடைய சங்கத்தில் ஒன்றான  தோழர். அன்பரசன் மற்றும் தோழர் பால் பிரேம் குமார்  - இருவரும்  நம்முடைய அஞ்சல் மூன்றின் செயல்பாடு குறித்தும் , இந்த நேரத்தில் ஊழியர்களின் ஒற்றுமை  காலத்தின் தேவை என்றும்  உணர்ச்சி பூர்வமாக  தங்களது கருத்துக்களை  தெரிவித்தனர்.

நம்முடைய மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள்  இணைந்த தோழர்களை  இனிதே வரவேற்றதோடு,  எதிர்வரும் உறுப்பினர் சரிபார்ப்புக்கு முன்னரே தலைநகரத்தின்   மிக முக்கிய கிளைகளில் இந்த இணைப்பு நடைபெற்றது  மிகச் சிறப்பான  ஒன்றாகும் என்று கூறினார் . 

இந்த இணைப்பு என்பது  நமது செயல்பாட்டிற்கு கிடைத்த உளப்பூர்வமான அங்கீகாரம்  என்பதை பெருமையுடன்  பகிர்ந்துகொண்டார்.  GPO கிளையின் பொருளர்  தோழர். M . சந்திரசேகர் அவர்கள் இனிதே அனைவரையும் உபசரித்தார்.  நிகழ்வின் முடிவில்  GPO கிளையின்  உதவித் தலைவர் தோழர்   G . செல்வம் அவர்கள் நன்றி கூற , நிகழ்வு இனிதே நிறைவுற்றது. 

இது ஒரு முன்னோட்டமே ! எதிர்வரும்   உறுப்பினர் சரிபார்ப்பில் மீண்டும்  நம்முடைய  பலம்  முந்தைய காலம் போல  நிரூபிக்கப்படும் ! நம்முடைய தோழர்கள்  பம்பரமாக செயல்பட்டு    நம் சங்கத்தை  அனைத்து மாநிலங் களுக்கும் முதன்மையானதாக  நிச்சயம்  ஆக்குவோம்  என்று  உறுதி பூணுவோம் ! வெற்றி நமதே !  என்றும் நம் கடன்  பணி  செய்து கிடப்பதே !

வாழ்க  NFPE  !    வளர்க  நம் இயக்கம்  ! ஓங்குக ஒன்றுமை !
நிகழ்வின் சில புகைப்படங்கள் :-